எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது இந்தியன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலாகும்.
இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,மனீஷா கொய்ராலா,சுக்னயா,நாசர்,கவுண்டமணி,செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். A. M. ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்ற படங்களில் இதுவும் ஒன்று. இதற்கு வாலி மற்றும் வைரமுத்து ஆகியோரின் பாடல் வரிகளும், ஹரிஹரன் ஜேசுதாஸ் பாலசுப்ரமணியம் போன்ற பிரபல பாடகர்களின் இணைவும் முக்கிய காரணமாகும். ஒளிப்பதிவு ஜீவா.
லஞ்சத்துக்கு கொள்ளிபோட துணிந்த வயோதிக தியாகியாக.. வெள்ளி நரையும், சுருங்கிய முகமும், தளர்ந்த உடலும்,தடுமாறாத உறுதியும் கொண்ட “இந்தியன்’ தாத்தாவாக நடித்து இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்களைகமல் கட்டிக்கொண்ட படமிது. கமலுக்கு தேசிய விருதினை பெற்று தந்ததோடு திரைத்துறையின் அதியுயர் விருதான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது.
இனி விடயத்துக்கு வருவோம் அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற “பச்சை கிளிகள் தோளோடு……..” என்ற பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள் நிச்சயம் ரசித்திருப்பீர்கள் நானும் கூட…..
ஜேசுதாஸின் அற்புதமான குரல் பாடலுக்கு மேலும் பலம். பாடல் என்கின்ற பெயரில் கொச்சைத்தனமான வரிகள் எதுவும் இல்லாமல் ஒரு பாடலை கொடுத்ததற்கு கவிஞருக்கும் பாடலை அனுமதித்ததற்கு இயக்குனருக்கும் ஒரு சபாஷ் போடலாம்.
“பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை…” என்று மனித வாழ்க்கையின் ஆனந்தங்களை சொல்கின்றது.
அன்பில் தான் வாழ்க்கை இருக்கின்றது பணம் எதற்கு…. அழகாக சொல்கின்றார் கவிஞர். ஒரு சிறிய விவசாயக்குடும்பம் பெற்றோ இரண்டு பிள்ளைகள் , அவர்களின் வாழ்க்கையின் சந்தோசங்களை , அவர்களுக்கிடையிலான அன்பை பதிவு செய்ய பாடல் உதவி உள்ளது. எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும் அந்த அழகிய வாழ்க்கை.
நீங்களும் கேட்டுப்பாருங்கள் இந்த பாடலை
அடுத்து பாடல் படமாக்கப்பட்ட விதம் பாடலிலே ஒளிப்பதிவாளர் ஜீவா மண் மணம் மாறாத, இயற்கையோடு இணைந்த ஒரு கிராமத்தை (கதையின்படி திருமுல்லைவாயில்) அழகாக பதிவு செய்துள்ளார். பச்சை பசேலென்ற வயல் வெளிகள், நீர் நிலைகள் போன்றவற்றை கண்முன் நிறுத்தி இருக்கின்றார். நடனம் என்ற போர்வையில் பாடலைக் கெடுக்காமல் கதை ஓட்டத்திலேயே பாடலை படமாக்கி இருப்பது பாராட்டத்தக்க விடயம். பொதுவாக அப்பாக்களுக்கு ஆண் பிள்ளைகளை விட பெண்பிள்ளைகள் மீது பாசம் அதிகம் அது இந்த பாடலில் காட்டப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவில் என்னை மிகவும் கவர்ந்த காட்சி பானைக்கு மண் குழைக்கும் இடத்தில் எல்லோரும் ஆட முயற்சி செய்து சறுக்கி விழுவதும் அதில் முதிய வயது கமல் விழாமல் ஆடும் போது பின்னால் நின்று மனைவி ஆடுவதும் கணவன் பார்த்தவுடன் சேலைத்தலைப்பை எடுத்து போர்த்துவதும் கவிதையான தருணங்கள். இது அந்த பாடல்க்காட்சி பார்த்து ரசியுங்கள் என்னோடு சேர்ந்து.
Saturday, July 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
இசைப்பிரியன் மிகவும் அருமை
Post a Comment